இவள் உயிர் காப்பவள்
மரங்கள் பூமியை அழகாக்குகின்றன. மரங்கள் அசாதாரணமானவை அவை நிழல் தருகின்றன. எழில் சேர்க்கின்றன.
எங்கெல்லாம் அதிக மரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அதிக மழை பொழிய
வாய்ப்பிருக்கின்றது.மழையின்மைக்கு காரணம் மரங்களின் குறைவே என்பது அறிவியல் அறிஞர்களின் கருத்து. மரங்கள் அதிகமாக இருங்தால் நிலத்தில் குளிர்மை ஏற்பட்டுக் குளிர்காற்று வீசும். அதனால் மழை பெய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
வளிமண்டலத்தில் மேற்குபகுதியில் ஓசோன் வாயுப் போர்வை பூமியிலிருந்து 6 முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை மீவளிமண்டலத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்காகப் பரவிக் கிடக்கின்றது.இந்த ஓசோன் வாயு சூரியனின் புறஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும் ஒரு பாதுக்காப்புக் குடையைப் போன்று செயல்பட்டு வருகின்றது.
இரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து வரும் இரசாயனத் தொழிலகங்கள் கார்பன் டெட்ராக்குளோரைடு மீத்தைல் க்ளோராஃபார்ம், குளோரோ புளூரா கார்பன் போன்ற வாயுக்களைக் கழிவுப் பொருட்களாகக் காற்று மண்டலத்தில் வெளியேற்றி வருகின்றன. இந்த வாயுக்கள் ஓசோனைத் தாக்கி அதை அழித்து வருகின்றன.ஓசோன் அழிவினால் சூரியனின் புறஊதாக் கதிர்கள் நம்மை நேரிடையாக தாக்கும். இதனால் பல வியாதிகள் ஏற்படும். உற்பத்தியாகும் தானியத்தின் அளவும் குறைந்து விடும் என்பது ஆரய்ச்சியாளர்களின் கருத்து.
ஒசோன்
படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு
இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. நம் அணுவிஞ்ஞானி அவர்கள் மரம்
நடுங்கள் அவை பூமியின் வெப்பத்தைக் குறைக்கும் என்றார். அதைத்தொடர்ந்து பலர்
செயலாற்றி வருகின்றனர்.வைத்த கன்றுகள் எத்தனை உயிருடன் இருக்கின்றன என்பது வேறு
விடயம்,,,,,,,,
ஆசிரியர் மாணவர்களிடம் அசோகர்
ஏன் சாலையின் ஓரங்களில் மரங்களை நட்டார் என்று கேட்க மாணவர்கள் ஒவ்வொருவரும்
தனக்கு தெரிந்த பதில்களைக் கூறினர். ஒரு மாணவன் எழுந்து சாலையில் பிரேக் பிடிக்காத
வண்டிகள் முட்டி நிற்க என்றான்.
இருக்கலாம் எல்லா வகையிலும் பயன்படக் கூடியது தான் மரங்கள் என்றார்
அவ்வாசிரியர்.
மரங்கள் இப்பூமியை சமமான
வெப்பநிலையில் வைத்திருப்பவை,,,,, நம் முன்னோர் வைத்த மரங்கள் நமக்கு இன்று
பயன்படுகின்றன, ஆனால் நமக்கு பின் வருபவர்களுக்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்,,,, மரங்கள் பகலில் ஆக்சிஜனையும் இரவில்
கார்பன்டைக் ஆக்ஸைடையும் வெளியிடுகின்றன என்பது அறிவியல் உண்மை. ஆனால் சில மரங்கள்,
புல், செடி அதிக நேரம் ஆக்சிஜனை மட்டும் வெளியிடுகின்றன அறிவீர்களா? நமக்கு அதிக
நேரம் சுவாசிக்க நல்ல காற்று தருபவை எனும் போது நாம் அதனையாவது வளர்க்க
முயற்சிக்கலாமே,
அவை,
அரசமரம்
மரம்
மூங்கில் புல்
துளசிச்செடி செடி
அரசமரம் மரம்
நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று
மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா
சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். கிராமப்பகுதிகளில்
பெரியவர்கள் குழந்தையில்லா பெண்களை அரசமரத்தைச் சுற்ற சொல்வார்கள்,,,,,,
நாம் கூட கிண்டலுக்கு என்று சொல்வோமே
‘அரசனை நம்பி புருசனைக்
கைவிட்ட கதையாக இருக்கே‘ என்று
இதனால் ஏற்பட்டது தான் போலும்,
அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின்
மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும்
’அரச மரத்தை சுற்றிவிட்டு
அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்’என்ற பழமொழி உண்டு. இதன்
பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை
உண்டாக்கும். அரச மரத்தின்
காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது என்பது நம்பிக்கை, அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி,
மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும்
மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் அரச மரம்.
ஆனால் நாம் இன்று,
ஆக்சிஜனைக் காப்பாற்ற
அரசமரம் வைத்தார்கள்
அரசமரம் காப்பாற்ற
அடிபிள்ளையார் வைத்தார்கள்
இன்று
ஆக்சிஜனும் விட்டு
அரசமரமும் விட்டு
அடிபிள்ளையாரை
மட்டும் பிடித்துக்கொண்டு,,,,,,,,,
எனும் கவி வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.
மூங்கில் புல்
உலகத்திலேயே அதிவேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. நீண்ட காலம் வளரக்கூடிய புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். மூங்கில் மரம் ஏறக்குறைய 60
மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் மொத்த உயரமான
60 மீட்டரை, 59 நாட்களிலேயே மூங்கில்கள் அடைந்து
விடுகின்றன. இந்தியாவில் 175 வகை
மூங்கில்கள் வளர்கின்றன. இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. ஒரு மூங்கில் தனது
வாழ்நாளில் 450 டன் கார்பன் டை
ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை
வெளியிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
மூங்கில் மரம்
மொத்தமுமே மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. மூங்கிலிலிருந்து
பெறப்படும் மூங்கிலரிசி, மூங்கில்
தளிர் ஆகியவற்றை முறையே உணவாக உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட கொடுமையான வியாதியாக
இருந்தாலும் விலகி ஓடும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை
அண்டாது.
மூங்கில் அரிசி- குருத்து உணவுகளை
தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு யானை பலம் கொடுத்து, இரும்பை போல வலுவாக்கி, தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும்.
எவ்வளவு உறுதியான உடலமைப்பை பெற்றவர்கள் கூட
சர்க்கரை நோய் பிடித்தால் உருக்குலைந்து போவார்கள். ஆனால் அப்படி சர்க்கரை
வியாதியால் உருக்குலைந்தவர்கள் கூட இந்த மூங்கில் உணவுகளை
உட்கொண்டு வந்தால் மீண்டும்
பழைய உடலமைப்பை பெறுவார்கள் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, மூங்கில் தளிர்களை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். மேலும் பிரசவ காலங்களில் வலி இல்லாத பிரசவம் உண்டாக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கொழுப்புக் குறை உணவு இது. புண்களை ஆற்றும். அல்சருக்கு சிறந்த நிவாரணி. இந்த தளிர்கள் செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் உடனடி தீர்வு கொடுக்கும். வாசனை பொருட்களிலும், அழகுசாதன பொருட்களிலும், தலைமுடி தைலங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இன்றும் கிராமப்பகுதிகளில் இம் மூங்கிலின் பலன்கள் பார்த்திருக்கிறோம்.
துளசிச்செடி
தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ
சக்தி வாய்ந்தது. துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை
வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை
கொண்டது.
விதைப்
போட்டாலும், கன்றாக நட்டாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது
துளசிச் செடி. துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணிநேரம்
ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஓசோனை
வெளியிடுகிறது.
தற்போது, படித்த செய்தி ஒன்று ஆச்சிரியமாக
இருந்தது, ஆம் தாஜ்மஹாலைக்
காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால்
அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள்
கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால்
இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே.
எந்தப் பெருமாள் கொயிலுக்கு போனாலும் மன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உடல் நலத்திற்கு
துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக வாயில் போட்டு சுவைக்க துளசியும் கையில் கொடுப்பதுண்டு.
காற்று
மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணிநேரமும் ஆக்சிஜனை
வெளியிடுபவை அரசமரம், மூங்கில், துளசிசெடி.
இதில் அரச மரம் மூங்கில் ஆகியவற்றை
வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால்
துளசியை வளர்க்க சிறிய தொட்டியும் வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதும். துளசிச்செடியை
வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பிற்போக்கு தனமான பேச்சுக்களை
புறந்தள்ளிவிட்டு துளசியை வீடுகள் தோறும் வளர்க்க செய்வோம்.
தற்காலத்தில் வீட்டில் மணிபிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று நம்புகிறார்கள், காசு குடுத்து மணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து பணம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வானத்தைப் பார்த்துக் கொண்டு இல்லாமல், துளசி மாடம் வைத்து அதை வணங்குவது பத்தாம் பசலித்தனம், மூடநம்பிக்கை என்பவர்கள், வணங்க வேண்டாம் வாழ்க்கைக்காக வைப்போம்.
குழந்தைகளிடம் துளசிச்செடி தூய்மையானது என்று மட்டும் சொல்லாமல் பூமியைத் தூய்மையாக்க வல்லது, மகத்துவம் மிக்கது என்று மட்டும் சொல்லாமல் மருந்தானது என்று சொல்வோம்.
இனி ரோஜாச்செடி வைக்க ஆசைப்படும் முன் முதலில் தொட்டியில் ஒரு துளசிச் செடி வளர்க்க
ஆசைப்படுவோம். உங்கள் நலனுக்கும் நல்லது சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படுவதால் சமூகத்திற்கும் நல்லது. பெரிய பெரிய மரம் நட முடியாவிட்டாலும்
சிறு துளசிச் செடியாவது நடுங்கள். இனி இந்த பூமி சுழலட்டும் தூயக் காற்றால்.
நன்றி தகவல்கள் திரு.பாலச்சந்திரன்,
விக்கிபீடியா
நன்றி புகைப்படங்கள் கூகுல்
இப்படைப்பு ‘வலைப்பதிவர்
திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ்
இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை- (2) சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு-கட்டுரைப்
போட்டி-
விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் -
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல
என்றும் முடிவு வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் ---- முனைவர்.சீ.மகேசுவரி.