Tuesday, 1 December 2015

புது அம்மா அப்பா


தோழியர் கூட்டம் படம் க்கான பட முடிவு


புது அம்மா அப்பா




       அது கிறித்துவ அருட்சகோதிரியர்களால் நடத்தப்படும் மேல்நிலைப்பள்ளி. பள்ளியோடு இயைந்த மாணவிகள் விடுதி. மாணவிகள் ஆயிரத்திற்கும் மேல் படிக்கும் கல்வி நிலையம். எனவே விடுதி மாணவிகள் எண்ணிக்கைக் கொஞ்சம் அதிகம் தான்.

விடுதியில் மூன்று பிரிவுகள் உண்டு.

பெற்றோர் இல்லாதவர்கள்

குறைந்த வருமானம் உடையவர்கள்

பணம் கட்டக்கூடியவர்கள்

  இந்த வித்தியாசம் இருக்கும் இடம், உணவு போன்றவற்றில் தான், மற்ற இடங்களில் எல்லோரும் ஒற்றுமையாகத் தான்.

   இதில், பின் இரு பிரிவுகளில் உள்ளவர்கள் விடுமுறை எனில் தத்தம் இல்லங்களுக்கோ, உறவினர் இல்லங்களுக்கோ சென்று விடுவர்.

முதல் நிலையில் இருக்கும் மாணவிகள் அங்கே தான் இருப்பர்.

முழு கல்வி பரீட்சை முடியும் நேரம். குறைந்தது 30 நாட்களுக்கு மேல் விடுமுறை இருக்கும்.

தேர்வுகள் முடிந்து ஒன்று இரண்டு நாட்கள் பள்ளி நடக்கும். அது சும்மா,,,,,

 தேர்வுகள் முடிந்து, தேர்வு முடிவுகள் அஞ்சல் அட்டையில் வரும் வரைக் கொண்டாட்ம் தான்.

  விடுமுறைத் தொடங்க இருக்கும் முதல் நாள் இரவு முதல் நிலை பிரிவின் கண்காணிப்பாளர் அருட்சகோதிரியிடம் இருந்து அங்குள்ள மாணவி ஒருவருக்கு அழைப்பு. அவள் பெயர் லெட்சுமி. ( இனி லெட்சுமி என்றே பார்ப்போம்). லெட்சுமி உன்னை சிஸ்டர் அழைக்கிறார்கள் என்று சமையல் அக்கா சொல்லவும், அவள் ஏன் எதற்கு என்று கூடியிருக்கும் தன் வயது தோழிகளிடம் கேட்டுக்கொண்டே நடக்கத் தொடங்கினாள். மற்ற நாட்களாக இருந்தால் திட்டு, அடி விழும் படிப்புத் தொடர்பாக,,, மட்டும் தான். (அந்த அருட்சகோதிரி அங்கு இருந்த காலம் முதல் அந்த மாணவிகளை தன் மகள்கள் போலவே பார்த்துக்கொண்டார்.) இப்ப தான் அது இல்லையா? சரி ஏதேனும் வேலையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு சமையல் அக்காவுடன் நடந்தாள். இங்கு ஒரே பாட்டுக் கச்சேரி தான், அதான் படிக்க வேண்டாமே,,,,

   சிறிது நேரத்தில் லெட்சுமி வந்தாள். ஏய் ஏன் அழைத்தார்கள் என்று கேட்ட தோழிகளிடத்தில், இருங்கடி வருகிறேன் என்று சொல்லி எங்கோ சென்று விட்டு திரும்ப வந்தாள்.

ஏய், ஏன் எதுவும் திட்டு வாங்கினாயா? என்று கேட்டதற்கு இல்லைப்பா என்றாள். பின்ன என்ன சொல்லுடி, ரொம்ப பிகு பன்னாம என்று கேட்டபிறகு, தயங்கியபடியே, என்னை யாரோ ஒரு பணக்காரங்க கேட்டாங்களாம் அங்கு போகிறாயா? என்று கேட்டாங்க என்றாள்.

நீ என்ன சொன்னாய் என்றதற்கு,

நான் ஒன்னும் சொல்ல, என்ன சொல்வது, வந்துட்டேன். என்றாள்.

  உடன் அவள் நெருங்கிய தோழி அவளிடம் நான் ஒன்னு சொன்னா கேட்பாயா? லெட்சுமி, நமக்கோ யாரும் இல்லை, உன்னை அவர்கள் நல்லபடியாக பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு குழந்தையில்லை போலும் சின்ன குழந்தை வேண்டாம் என்று நம் போல் பெரிய பிள்ளைகள் போதும் என நினைத்து கேட்கிறார்கள். ( அவள் ஒன்பதாம் வகுப்பு படிப்பவள்) நீயும் அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டு நல்லா படிக்கலாம். எப்படியும் உன்னை அவர்கள் நல்லா பார்த்துக்கொள்வார்கள். நான் பெரியவள் ஆன போது எவ்வளவு அழுதேன். மற்ற பிள்ளைகள் தங்களுக்கு செய்த சடங்கு போட்டோக்களைக் காட்டும் போதும்,,,,, என்றாள், உடனே லெட்சுமி அதான் சிஸ்டர் உனக்கு வீட்டில் இருந்தால் எப்படி இருக்குமோ அது போலவே செய்தார்களே, ( அந்த நிகழ்வு பிறகு சொல்கிறேன்.) போட்டோ முதற்கொண்டு என்றாள்.

   இருந்தாலும் நாம்,,,,,,,,,

  சரி லெட்சுமி, உன்னிடம் சிஸ்டர் கேட்டா, போகிறேன் என்று சொல்லி விடு. உனக்காவது அப்படி ஒரு உறவு கிடைத்தால் நல்லது தானே என்றாள்.அவளும் அமைதியாக பதில் ஏதுவும் கூறாமல் கேட்டுக்கொண்டாள். அதற்குள் அங்கிருந்த மற்ற மாணவிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செய்தி தெரிந்து அக்கா நீங்க போறீங்களா என்று சின்னப்பிள்ளைகள் முதல் அனைவரும் அவளிடம் கேட்க தொடங்கினார்கள்.

  அவளுக்கு ஒன்றும் புரியல. எல்லோரும் நல்லவிதமாக சொன்னதால் சரி என்று அரைக்குறை மனதுடன் இருந்தாள். இப்படி பேகிக்கொண்டே அனைவரும் உறங்க தொடங்கினார்கள். அவள் மனநிலை மட்டும் பலவாறு சிந்திக்க தொடங்கியது. தாம் அவ்வீட்டில் அவர்கள் மகள் போல் நடத்தப்படுவது போல், புது புது ஆடைகள், நல்ல உணவு, பல இடங்களுக்கு தன் புதிய தாய் தந்தையுடன், நிறைய மனிதர்கள், அவர்களும் உறவுகளாய்,,,,,,,,, இப்படி பல நினைவுகளுடன் உறங்கிப் போனாள். விடிந்ததும் எப்பவும் எழும் நேரம் கடந்தும் உறக்கத்தில். அது நிம்மதியான உற்க்கம் அல்லவா?

  அவள் தோழி எழுப்பியவுடன் எழுந்தவள், உடனே அவளிடம், இனி நீ கவலைப் படாதே நான் இருக்கேன் உனக்கு, இனி எல்லா விடுமுறைக்கும் நீயும் என் வீட்டிற்கு வரலாம், நான் உன்னைப் பார்க்க இங்கு வருவேன். உனக்கு எல்லாமும் நான் தான் கவலைப்படாதே, நிறைய தின்பண்டங்கள் வாங்கி வருவேன் நீங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். என்று நிறைய நிறைய பேசினாள். அவள் தோழிக்கும் ஏதோ ஒரு ஆறுதல் போல் தோன்றியது. பிறகு எப்பவும் போல் அவர்கள் வேலைகள் முடிந்து காத்திருந்தாள். இப்போ அருட்சகோதிரி அவர்களே நேரில் அவ்விடம் வந்து, தம் அறைக்கு அவளை அழைத்தார்கள்.   அவளுடன் அவள் தோழியும் சென்றாள். வாமா லெட்சுமி நான் அவர்களிடம் எல்லாம் பேசிவிட்டேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டார்கள், சும்மா துணைக்கு தான் வேலை ஒன்றும் இருக்காது. இந்த ஒரு மாதம் மட்டும் தான். பள்ளி திறந்தவுடன் வந்து விடலாம் என்றார். அவளுக்கோ, தோழிக்கோ ஒன்றும் புரியல, சிஸ்டர் என்ன சொல்கிறீர்கள் என்று அவள் தோழி தான் கேட்டாள். சிஸ்டரும் அவளை அவர்கள் வீட்டிற்கு ஒரு மாதம் சும்மா சின்ன சின்ன வேலைகள் செய்ய அனுப்ப,,,,,,, என்று அவர் முடிக்கும் முன், அவள் அழதுக்கொண்டே ஓடிவிட்டாள்.

  தோழியோ விடாமல், வேண்டாம் சிஸ்டர் அவள் இங்கே உங்களுடன் இருக்கட்டும். வேண்டாம் என்றாள். எனக்கும் விரும்பம் இல்லைமா, அவர்கள் ரொம்ப நல்லவர்கள், ரொம்ப வருந்தி கேட்டார்கள், நானும் சரி என்று சொல்லவில்லை, என் மகளிடம் கேட்கிறேன் என்று தான் சொன்னேன். இவளிடம் கேட்டேன், இவளும் எதுவும் சொல்லவில்லையா,,,,, சரி ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்று தான்,,,,,,,

   சரி நீ போ அவளிடம் வேண்டாம் என்று சொல்லிவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களிடம் சொல்லிவிடுகிறேன். நீ போ என்றார்.

தோழியும், அது இல்ல சிஸ்டர், வந்து அவள்,,,,,,,

நீ போ, பிறகு பேசுகிறேன் என்று சிஸ்டர் போய்விட்டார்கள்.

தன் தோழியிருக்கும் இடம் தேடி அழும் அவளைச் சமாதானப்படுத்த தெரியாமல் தானும் சேர்ந்து அழுதாள். அவர்கள் அழுவதைப் பார்த்து மற்றவர்களும் செய்தி தெரிந்து அழ,,,,,,,,,,

சரி விடுங்கள் இது தான் நாம்,,,,,,,,

   வலை உறவுகளே தேவகோட்டை கில்லர்ஜி ஒரு தொடர்பதிவு ஆரம்பித்தார். அதில் பலரும் கடவுளைக் கண்டு பொதுநல கோரிக்கைகளை வைத்தனர். ஏனோ நான் தப்பித்து வந்தேன். நாம் தான் கடவுள் குறித்து ,,,,,

 சரிங்க, அதில் பாருங்க அன்புத்தோழி கீதா, மாலதி சகோ வை அழைக்க, மாலதி சகோ நம்மை தொடுக்க, நானும் சகோவிடம் எனக்கு பொதுநலம் எல்லாம் இல்ல சகோ, சுயநலம் தான் இருக்கு என்றேன். உடனே அவரும். பொதுநலமோ சுயநலமோ எதுவானாலும் ஆசையைச் சொல்ல என் தடை என்றார்கள். என் மனதில் தோன்றிய ஆசைகள் பெரும்பாலும் எல்லோரும் சொல்லிவிட, சரி என்னத்த சொல்வது என்று,,,,,,,

  சகோ, கடவுளைக் கண்டால் இந்த ஒன்று மட்டும் கேளுங்கள். ஏன் பூமியில் இந்த நிலை மனிதருக்கு என்று, இது ஒன்று மாறினாலே அனைத்தும் சரியாகும் இல்லையா,

அனாதைகள் இல்லாத உலகம் வேண்டும்,,,,,,,,

   இன்றுடன் நான் உங்களை எல்லாம் சந்தித்து (வலையில்) ஒரு வருடம் ஆகிறது. ஆம் நான் வலைத் தொடங்கி ஓர் ஆண்டு இன்றுடன்.

  என்னுள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது இவ் வலைப்பூ. அதற்கு முதலில் என் நன்றிகள், சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, அவர்களுக்காக நான் எழுதிய என் முந்தைய பதிவு என் வலைதள ஆசான்

  இங்கு நான் எதுவும் புதுசா சொல்லலீங்க, ஆனா நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் காத்திருக்கிறேன் கற்றுக்கொள்ள,,,,,,,

   என்னை ஊக்கப்படுத்தி உற்சாகத்துடன் எழுதத் தூண்டும் அன்புள்ளங்கள், உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

தொடர்கிறேன்.......

 

 

Thursday, 26 November 2015

நான் ஏற்றிய தீபங்கள்,,,,,

நான் ஏற்றிய தீபங்கள்,,,,,

                              


                                             தீப திருவிழாவிற்கு எத்தனையோ காரணங்கள் சொல்வார்கள்.

ஆனால் தீபம்  இருள் போக்கும் சக்தியல்லவா????.

எனக்கு கார்த்திகை மாதம் இந்த நாள் மிகவும் பிடிக்கும். காரணம் இது தான். கோலம் போடத் தான்.

இன்றைக்கு ஆரம்பித்து அடுத்த மாதம் மார்கழி முழுவதும் பெரிது பெரிதாக கோலம் போட மனம் அலையும்.

        ஆனால் மழை வந்தால் போட முடியாதல்லவா,,, மனம் சோர்ந்து போகும்.

காகிதத்தில் போட்ட கோலம் என்னைப் பார்த்து கெஞ்சும். என்னை எப்போ

கலர் கொடுத்து அழகுப் படுத்துவாய் என்று,,,,,,

சரிங்க வீட்டின் வெளியில் நிறைய தீபம் ஏற்றி, எட்டி நின்று பார்க்கும் போது,,,

அதன் அழகே தனி தாங்க,,,,



 இவுங்க தீபம் ஏற்ற உதவி செய்தார்கள். விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தார்கள்.


இதோ  நான் ஏற்றிய தீபங்கள்,,,,,
       


                                                   
                         



                                 
 இது உங்களுக்கு,,,,,,,,


                                           கார்த்திகை பொரி படம் க்கான பட முடிவு




அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, 24 November 2015

யாதுமாகி நின்றாய்,,,


                                       யாதுமாகி நின்றாய்,,,

  பூக்கள் க்கான பட முடிவு     பெண் என்பவள் பூப் பொன்றவள் என்று பெருமைப் படும் நாம், அவளை இப்படியெல்லாம் ,,, பொறுமையாக, பொறுப்பாக, அமைதியாக, அன்பாக, அடங்கி நடப்பவளாக இருக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் ஆசைகளும்.

   ஆனால் அவளுள்ளும் ஆசைகள் இருக்கும் என்பதை நாம் ஏனோ அறிவதில்லை. இல்லை உணர்வதும் இல்லை.

   எனக்கு தெரிந்த ஒருவர் திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாகி, கணவரின் பாராமுகத்தால் ,,,,,,,,,, சரி சரி இந்நேரத்தில் அந்த சோக கதை வேண்டாம். (இக் கதையை பின்னொரு நாள் அவசியம் சொல்கிறேன்.)

   பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கும் சமுத்திரம் என்பதும் நாம் அறிந்ததே,

   சரி சரி ஏன் இவ்வளவு சுத்தி வலைக்கிறீங்க, இப்ப என்ன சொல்ல வறீங்க, என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

         காயங்களும் வடுக்களும் ஏராளம்
            பெண்ணுக்குச் சுதந்திரம்
            பெண்ணுக்கு விடுதலை
                 பேச்சளவில் தான்,,,,,

   தன் வாழ்வில், இவ்வளவு தான் துன்பம் என்றில்லை, அவ்வளவு இன்னல்களையும் கடந்து, தன் பாதையில் ஏற்பட்ட, தடைக்கற்களைப் படிகற்களாய் மாற்றி,  இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் முதல்வராக, ( எங்களின் செயலாளர் அய்யா அவர்களுக்கு நன்றி சொல்வது,,, கடமை, நன்றி என்ற வார்த்தை மிகக் குறைவே, அவரின் நல்மனதால் கிடைத்த பணியே இது.) தன் வாழ்க்கை எனும் பாடத்தை மாணவர்களுக்கு முன்மாதிரியாக சொல்லிக்கொடுக்கும் சிறந்த முதல்வராக இருக்கும் என் போற்றுதலுக்குரிய,,,,,

                     

                                 முதல்வர் இவர்,,,,

   தன் இரு பெண் பிள்ளைகளையும் நன்முறையில் வளர்த்து, சமூகம் மதிக்கும் ஒழுக்கமானவர்களாக வளர்த்தது இவரின் தனிமை வாழ்க்கையின் சாதனையே,,,

ஒரு பெண் பொறியியல் துறையில் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார்.

சின்ன பெண் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்,,,,,,,,,,,

இன்று தன் கணவரையும் தன் குழந்தைப் போலவே பேணி வருகிறார்.(வாழும் வயதில் வாழ்க்கையைத் தொலைத்த இவர்,,,,,,,,,)

                      

பெண் 

எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். 

பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் எனும் வரிகள் இவருக்கு பொருத்தமாய்,,, 

  தன் மகள், தன் ஊதியத்தில் ஒரு பட்டுப்புடவை வாங்கிக் கொண்டு, இனிப்புகளுடன் இரவு 12,00 மணி போல் தன்னை எழுப்பி வாழ்த்துச் சொல்லி தன் தந்தை மற்றும் உறவுகளுடன் சேர்ந்து இனிப்பு கொடுத்து மகிழ்ந்ததைச் சொல்லும் போது அவரின் கண்கள் பனித்ததை உணர முடிந்தது,,,,

    நான் பெண்ணாய் பிறந்ததின் பயனடைந்தேன் என்று,

 தன் துனிச்சல் எல்லாம் மறந்து சிறு குழந்தையாகிப் போனார் மகிழ்ச்சியில், 

                      

 மனம் துவளும் நேரத்தில் தோளோடு அணைத்து ஆறுதல் சொன்ன இவரின் அன்புத் தோழியிவர். 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நட்பு இவர்களுடையது. ( ஏற்கனவே என் திருச்சி பதிவில் இவரைப் பற்றி சொல்லியுள்ளேனே அவர் தான். திருமதி ராஜேஸ்வரி அவர்கள்.).

 பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளடைய கண்களில் இருக்கிறது.

                  இன்று இவரின் 50 வது பிறந்தநாள்,,, 

இனி என்றும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தொடர வாழ்த்துகிறோம்.

ஏனோ எனக்கு இப்படியாக என் வாழ்த்தைச் சொல்லத் தோன்றியது,,,,

யாதுமாகி நின்றாய் எனும் பாடல் வரிகள் எனக்கு இவராய்த் தெரிகிறது.

தன் பிள்ளைகளுக்கு மட்டும் யாதும் ஆகியவர் இல்லை, எனக்கும் தான்.

                     வாழ்த்துக்களம்மா,,,,

உங்கள் வாழ்த்துக்களும் அவருக்காகட்டுமே என் வலை உறவுகளே,

                       நன்றி.

                                          பூக்கள் க்கான பட முடிவு

 


Wednesday, 18 November 2015

பார்த்ததும் தைத்தது

பார்த்ததும் தைத்தது 
 இதயத்தில் அம்பு விட்ட படம் க்கான பட முடிவு 
  அழகிய மாலைப் பொழுது, இளங்காற்று தழுவிச்செல்லும் வேளையிலும் தன் மேல் எழும் வெப்பம் தாங்காமல் சோகமே உருவாய் அமர்ந்து இருக்கும் நண்பனிடம் வந்தான் அவன்.

என்னடா, இப்படி இருக்கின்றாய் என்று வினவ,

 எல்லாம் அவளால் தான்டா என்று புலம்புகின்றான்.

அய்யோடா இங்கேயும் காதல் தோல்வி பற்றிய பதிவா என யாரும் கவலைப் பட வேண்டாம்.

இது தோல்வியால் வந்த சோகம் இல்லிங்க,

காதல் படுத்தும் இன்ப வேதனை. பெண்ணைப் பார்த்துக் காதல் பசலைப் படர்ந்துக் கிடக்கிறாள் என பல கவிஞர்கள் சங்க இலக்கியத்தில் எழுதியதுண்டு, அதே இலக்கியத்தில் ஆணின் பசலையும் பேசப்பட்டு இருக்கின்றது.

மனதில் காதல் தோன்றியதுமே, அதை பிறர் அறியாமல் மறைக்க வேண்டும் என்று தான் தோன்றுமோ,,,,,,,

மறக்கவும் மறைக்கவும் முடியாத ஒரு நிலை.

அவளின் நினைவுகள் அவனுக்குள் ஏற்படுத்திய நெருப்பு கங்குகள் தகிக்கின்றன. அவன் அவள் நினைவில் உருகிக் கொண்டிருக்கிறான்.

தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம்.

அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..
குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..

அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்!

அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.

அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத் தந்தாள்
.
அது தான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.

இப்படி ஒரு குறுந்தொகைப் பாடல்ங்க,,,,,,
அப்பாடல் இதோ,
 

பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோப்புவான் பெருமழைக் கண்ணே
                                      பாடல் 72 
                                      ஆசிரியர் மள்ளனார்
                                      குறுந்தொகை
( தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினவிய பாங்கற்கு உரைத்தது.)
 

தேமொழி                    -  இனிய மொழி

திரண்ட மெல் தோள்         - பருத்த மெல்லிய தோளினை உடைய

பரீஇ வித்திய ஏனல்          - பருத்தியை இடையிலே விதைத்த
                               தினைமுதிர்ந்த புனத்தின் கன் 

குரீஇ ஒப்புவாள்              - அத்தினையை உண்ணவரும் 
                               குருவியினங்களை ஓட்டுகின்றவளது 

பெரு மழைக் கண்             - பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள்

பூ ஒத்து அலமலரும் தகைய   - பூ வினை அழகில் ஒத்துச் சுழலும் 
                                 தன்மையை உடையன 

ஏ ஒத்து                        - ஆயினும் கொடிய தொழில்
                                   அம்பினை  ஒத்து

எல்லோரும் அறிய             - நின்னைப் போன்ற யாவரும் 
                                 என்னுடைய வேறுபாட்டை அறியும்படி

நோய் செய்தன                 - எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.

  தலைவியின் நினைவுகளோடு மயங்கிக் கிடந்த தலைமகன் உடலில் காணப்பட்ட வேறுபாடுகளைப் பார்த்து, இவை எதனால் ஏற்பட்டன எனக் கேட்ட பாங்கனுக்கு தலைவன் சொல்லிய பதில் இது என மள்ளனார் விளக்குகிறார்.

இந்த பாடலில் இருந்து தான் 
இதயத்தில் அம்பு விட்டு இருப்பாங்களோ நம்மவர்கள்


Friday, 13 November 2015

வசந்தகால வாழ்க்கையாக்கிய பாடல்

               வசந்தகால வாழ்க்கையாக்கிய  பாடல்                    
                  இயற்கை காட்சிகள் படங்கள் க்கான பட முடிவுபுகைப்படம் நன்றி கூகுல்
பெண்களின் நட்பு இதன் தொடர்ச்சி
   நாம் இருப்பது அவருக்குத் தெரிந்து போச்சே என்று நினைத்து அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்க்க,,,, எது அந்தச் சங்க இலக்கியப் பாடல், எங்களை நட்பாக்க வைத்த பாடல், உறவுகளுக்குள் உறவாட வைத்தப் பாடல், வசந்தகால வாழ்க்கையாக்கிய பாடல் நாளை சொல்கிறேன்.
என்றேன் அல்லவா, இதாங்க,
  அவர் பேச ஆரம்பித்தவுடன் வார்த்தைகள் சும்மா அருவிபோல் கொட்டியது,,,,, கொட்டிய நீர் அதன் வழியே தங்குத் தடையில்லாமல் செல்லுமே அப்படி,
  தன் கைகளைக் காற்றில் வீசினார், என்னவோ வானத்தை அளந்தது போல் இருந்தது,விண்ணை முட்டும் வியன் மலையையும், உயர்ந்து நிற்கும் மலைமுகட்டையும், அதனை உரசும் நீலவானத்தையும், கோல வெண்மதியையும் கண்டு நெஞ்சு பறிகொடுக்காதார் யார்??
  உள்ளத்தைத் தம்வயமாக்கி உலகையே மறக்கச் செய்யும் மட்டிலா ஆற்றல் படைத்தவை,,,,,

    அழகிய, உயரமான, கண்கவரும் பச்சைப் பட்டாடை உடுத்தி மலையரசி மோகனப் புன்னகைப் புரியும் அவ்வுயர்ந்த மலையில், சுவைமிகு பழங்கள், காய்கள் நம்மைப் பார்த்து கண்சிமிட்டிய படியே, என்னை எடுத்துக்கோ என்று கொஞ்சுகின்றன. நன்கு பழத்த வாழை, பலா பழங்கள் பறிப்பார் இல்லாமல் கனிந்து கீழே விழுகின்றன. விழும் இவைகள் நேராக கீழே விழுமா? அவைகள் பக்கத்தில் இருக்கும் பாறையில் பட்டு சிதறி தெறிக்கின்றன. பாறைகளின் இடுக்குகளில் தேன்  கூடுகள் அதிகம் உள்ளன. அவற்றில் பட்டு சிதறியதால் தேனும் கீழே சொட்டுகிறது. அப்படி கீழே விழும் இடத்தில் ஓர் குளம், அதில் மிக குறைவாகத் தான் நீர் உள்ளது. விழுந்த பழங்கள், தேன் இவைகள் நன்கு கலந்து நாள்பட்டுப் போனதால் ஒரு விதமான புளிப்பு சுவை ஏறி ( என்னங்க,,,,, ம்ம் அதான்) வேறு சுவையில் நிறைந்து காணப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் ஆண் குரங்கு ஒன்று தன் வயிறு முட்ட காய்கள், கனிகள் என தின்று விட்டு, தாகம் அதிகமானதால் அங்கு அருகில் காணப்பட்ட நீர் உள்ள குளத்தில், நீர் என்று நினைத்து அங்குள்ள பழங்கள் கலந்த கலவையை நன்றாக குடித்துவிட்டது. ( ஆமாங்க, பின்ன  அதனால் எப்படி நடக்க முடியும்) பக்கத்தில் உள்ள மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற முடியாமல் அங்குள்ள மரங்களில் இருந்து உதிர்ந்த மலர்கள் நல்ல மெத்தென்ற படுக்கைப்போல் இருக்கு. தடுமாறி விழுந்த கடுவன் அந்த பூக்களால் ஆன படுக்கையில் மகிழ்ந்து உறங்குகிறது. இத்தகைய எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும் அழகிய மலைநாடு,
 வார்த்தைகளையே வனமாக்கி வளம் சேர்க்கும் இயற்கை அழகைப் பாருங்கள்,, 
   அகப்பொருளை கவினுற உணர்த்தும் பான்மையால் நூலே அகம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் அகநானூறு எனும் சங்க இலக்கிய நூலில் முதல் தொகுப்பான களிற்றியானை நிரை எனும் பகுதியில் கபிலர் படைத்தளித்துள்ள இரண்டாம் பாடலே இதுதாங்க, 
ம்ம் இதோ அப்பாடல்
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையோடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், மலைப்
பல்வேறு விலங்கும், எய்தும் நாட
தேறல்              / கள்
ஊழுறு               / முறைமைப்பட்ட
உண்ணுநர்த் தடுத்த  / தன்னை உண்டவர் வேறொன்றை உண்ணாவகை
குறியா இன்பம்       / சிந்தனையும் முயற்சியும் இன்றி வந்த இன்பம்.
கடுவன்             / ஆண்குரங்கு
அறியாது உண்டல்   / நீர் வேட்கையால் இதனைக் கள் என்று அறியாது 
                       உண்ணுதல்.
எப்படி இருக்கு நம் சங்க இலக்கியம் காட்டும் இயற்கை அழகு,,

                இயற்கை காட்சிகள் படங்கள் க்கான பட முடிவுபுகைப்படம் நன்றி கூகுல்
               



வேறு ஒரு பதிவில் வேறு ஒரு பாடலுடன்,,,,,,



Monday, 9 November 2015

என்னளவில் தீபாவளி
தீபாவளி பண்டிகைப் படம் க்கான பட முடிவு
                                              நன்றி படம் கூகுல்
    தீபாவளி பண்டிகை ஒரு நீதிப்பண்டிகையாகத் தான் பார்க்கிறேன். யார் தவறு செய்தாலும் தண்டைனை அடைந்தே தீரவேண்டும். இது உலக நியதி என்பதை உணர்த்தும் பண்டிகை. இந்த உலகத்தையே நடுங்க வைத்து கொடுமைப் படுத்திய நரகாசுரன் இறப்பும், நீதி வரலாறைத் தானே நமக்கு கூறுகிறது.

பூமாதேவியை காப்பாற்ற, விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சன் என்ற அரக்கனை அழித்தார். அப்போது பூமாதேவியும், விஷ்ணுவும் மகிழ்ந்த போது பிறந்தவன் தான் நரகாசுரன் (வேறு கேள்வியியெல்லாம் இங்கு கேட்கப்படக்கூடாது,,,,, சரியா) என்பது வரலாறு.

   அவன் தவம் இருந்து எண்ணற்ற வரங்களை இறைவனிடம் பெற்றான். வரம் கிடைத்ததால் வழி தவறினான். தேவர்களையும் நடுங்க வைத்தான். என்ன செய்கிறோம் என்று அறியாமல் கொடுமைகள் செய்தான். கொடுமைகள் அதிகரித்ததால் கதறிய மக்கள், தேவர்கள் குறைகளை, களையும் நிலை விஷ்ணுவுக்கு ஏற்பட்டது. நரகாசுரனை வதம் செய்து காப்பாற்றுவதாக மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உறுதி அறித்தார். நரகாசுரன் வதம் செய்யப்படும் வேளை வந்ததும் இறைவன் சத்தியபாமாவுடன் சேர்ந்து போருக்குச் சென்றார். போரில் பூமா தேவி அம்சமான சத்தியபாமா கைகளாலேயே நரகாசுரன் அழிந்தான்.

    பெற்ற பிள்ளையையே அழிக்க வேண்டிய நிலை சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. நீதிக்கு முன்பு மகனா முக்கியம்? கொடுமைகள் புரிபவன் மகனே ஆனாலும் அவன் அழிந்தே தீருவான் என்பதை நரகாசுரன் வதம் மூலம் உலகுக்கு இறைவன் உணர்த்தினார். போரில் தன் முன்னே நிற்பது மகன் என்று சத்தியபாமா பார்க்கவில்லை.உலகத்தையே நடுங்க வைக்கும் ராட்சசன் என்றுதான் பார்த்தாள். வில்லாள் அவனை அழித்தார் அந்த தாய், உலகில் நீதியை நிலைநாட்டினார். கொடுமைகளுக்கு விடிவு, நீதியின் வெளிச்சம். உலகோர் மகிழ்வோடு கொண்டாட இறைவனே ஆணையிட்டார். அந்த திருநாள், தீப நாள்தான் தீபாவளி என்கிறது புராணம்.

           அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

                     தீபாவளி பண்டிகைப் படம் க்கான பட முடிவு

(என்னவர் சுகமில்லையாகையால் மருத்துவமனையில் இருப்பதால்,இவ்வாண்டு தீபாவளி மருத்துவமனையில், தங்கள் பதிவுகளுக்கோ, என் பதிவு பின்னூட்டத்திற்கோ உடன் பதில் அளிக்க முடியாது உறவுகளே,,,,  ஓய்வில் பதிவுகளைப் படிக்கிறேன்.இங்கும் நம்மைப் போல் எவ்வளவு பேர்,,,, இவர்களும் தீபாவளியில் இங்கு இருக்கிறோமே என்று தானே,,,,, அனைவரும் விரைவில் நலம் பெறவேண்டும்.
விரைவில் வந்து விடுவோம், மீண்டும் வலைப்பக்கம் வரும் வரை,,, பாலமகி.)

Wednesday, 4 November 2015

பெண்களின் நட்பு
கல்லூரி மாணவிகள் படம் க்கான பட முடிவு
   நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. பெண்களின் சந்திப்பு என்பது ஏதோ ஒரு திருமணம், காதுகுத்து, விழாக்கள் இப்படித்தானே, (நகைக் கடை, புடவைக்கடை என்று சொல்லாதீர்கள்) நானும் ஒரு திருமணத்தில் தான் அவளைச் சந்தித்தேன். நீண்ட நாட்கள், நாட்கள் கூட அல்ல மாதங்கள்,,,,,, அல்ல அல்ல வருடங்கள், ஆம் 10 ஆண்டுகள் இருக்கலாம்,,,,, என்னை அடையாளம் கண்டு என்னருகில் வந்து நலமா? என்றாள்,,,, ம்ம் என்றேன் சிரிப்புடன். 

   எனக்கு ஒரு பழக்கம் உண்டுங்க. மறந்து இருந்தாலும் அப்படியே நினைவில் இருப்பது போல் பேசிச்சமாளித்து விடுவேன். யார் என்று சொல் பார்க்கலாம் என்றாள் விடாப்பிடியாக,,, நானும் என்னப்பா இது உன்னை மறப்பேனா?????? என்றேன். வேற என்ன சொல்ல முடியும், ஆனால்,
அவள்,  
ஆமா உன்னைத் தெரியாதா?
நகமும் சதையும் போல்,,,,,,,
ஈர் உடல் ஓர் உயிர் போல்,,,,,,,,
இன்னும் என்னெல்லாமோ சொல்லிக்கொண்டே போனாள்,,
எனக்கு விளங்கிவிட்டது இவள் எங்கு வருகிறாள் என்று,,, 

  இவள் யார் என்பதில் இருந்து தப்பித்த மகிழ்ச்சி மறைந்து, அவள் முகத்தைப் பார்க்கும் தைரியம் அற்றுத் தலைகவிழ்ந்து அமர்ந்தேன். சிறிது நேர அமைதிக்குப் பின் நானே தொடர்ந்தேன். உன்னவர் என்ன செய்கிறார், குழந்தைகள் எத்தனை? என்ன படிக்கிறார்கள் என்று கேட்டுப் பதில் பெற்றேன். அவளும் என்னை விசாரித்தாள். ஆனாலும் அவளின் பார்வை என் மனதைப் படித்தவாறு இருந்தது. உன்னால் எப்படி  இப்படி இருக்க முடிகிறது. நீயா இது, எனக்கு ஆச்சிரியமா இருக்கு, உங்களைப் பார்த்து,,,,,,
என்று பேசிக்கொண்டே போனாள்,,,,,,,

  சரி சரி உன் கோபத்தை விட்டு விட்டு அவளிடம் பேசப் பாரு,, எப்படி இருந்தவர்கள் நீங்கள்,,
கல்லூரி காலத்தில் நம் வகுப்புப் பேராசிரியர்களே உங்களின் நட்பினைச் சிலாகித்தது மறந்து போனதா? என்று பழய சம்பவங்களைப் பேசியபடியே போனாள்,
என்ன தான் பிரச்சனை????
ஏன் இருவரும் பேசாமல் இருக்கிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டாள், பதில் பேசாமல் அவளையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். 

    ஆம் எங்களுக்குள் என்ன பிரச்சினை,,, எதுவும் இல்லையே, பிறகு ஏன் தொடர்பில்லாமல், அதற்குள் அவளின் கணவர் வந்துவிட, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் பழங்கதைகளை,,, சரி நாங்கள் கிளம்பனும் வருகிறோம் என்று அவர்கள் கிளம்பிவிட்டார்கள்,,,

    என் மனதை எழுப்பி விட்டு விட்டு. நான் இருக்கும் இடம் மறந்து போனது, பக்கத்தில் இருப்பவர்கள் மறந்து மறைந்துப் போனார்கள், என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஆம் அவள் சொல்வது உண்மைதானே, எப்படியெல்லாம் இருந்தோம். நீங்கள் ஒருவரையே இருவரும் திருமணம் செய்துகொள்வீர்களா? என்று உறவுகளே கிண்டல் பேசும் அளவிற்கு அல்லவா இருந்தோம். இன்று,,,, 
எத்தனை ஆண்டுகள் நட்பு. மனம் பலவாறு அவளை நினைத்து அசைப்போட்டது.

பெண்களின் நட்பு என்பது திருமணம் வரைதானே,,

    அவளை நான் முதன் முதலில் சந்தித்தது ஒரு பேச்சுப் போட்டியில் தான். என் துறைச் சார்ந்தவள் அல்ல, ஆனால் தமிழ்ப் பேச்சு போட்டி. யாரோ மகி யாமே அவர்கள் பேச்சு போட்டியில் கலந்துக்கொண்டால், அவர்கள் தான் முதல் பரிசாமே என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். பக்கத்தில் இருப்பவர்களிடம் நான் தான் என்று சொல்ல வேண்டாம் என்று சைகையில் சொல்லிவிட்டு அவர்களையேப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவர்கள் இன்னும் வரவில்லை என்று சொல்லி சமாளித்து, என் துறைமாணவிகளும் அவர்களுடன் சேர்ந்துப் பேசிக்கொண்டு இருந்தோம். போட்டி ஆரம்பித்தது. அவர் முறை வந்தது,,, சரி என்ன தான் இவர் பேசப் போகிறார் என்று மிக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தேன்,, 

    இந்த பேச்சு தான் என்னை அவருடன் நட்பு பாராட்ட வைத்தது. இயற்கை வருணனை, சங்க இலக்கியப் பாடல், ஆஹா என்ன ஒர் அழகான விளக்கம், அருமையான சொற்பிரயோகம், அழகிய அபிநயம், சங்க இலக்கியப் அப்பாடல் எனக்கு அன்று தான் தெரிவது போல் இருந்தது. ஒத்த ரசனையுடையவர்களைப் பார்க்கும் போது மனம் அவர்கள் பால் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது மெய்தானே,,, அப்படித்தான் இருந்தது என நிலை, கைத்தட்டல் ஓசை கேட்டுச் சுயநினைவு பெற்றேன். என் முறைவந்தது எனக்குப் பேச ஆர்வம் இல்லை. பேசவும் கூடாது என்று முடிவெடுத்தேன். கடைசிவரை நான் பேசவேயில்லை. போட்டி முடிந்து வெற்றியாளர்களை அறிவித்தார்கள். 

  தோழிகள் உனக்குத் தான் முதல்பரிசு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அவர் தமக்கு இரண்டாம் மூன்றாம் இடமாவது கிடைக்கும். இல்ல அதுவும் இல்லாமலும் போகலாம் என்று தன் தோழியர்களிடம் பேசிக்கொள்வதும்,,,,,, இடையிடையே என்னைக் கேட்பதும் என் செவிகளில் விழந்தபடி இருந்தது. 

   போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மூன்றாம் இடம் அவர் பெயர் இல்லை, இரண்டாம் இடம் அவர் பெயர் இல்லை, முதல் இடம், பெயர் அறிவித்தார்கள், அவர் பெயர் தான் மகிழ்ச்சியில் இருக்கும் இடம் மறந்து கைத்தட்டினேன். அனைவரின் கைத்தட்டலும் நின்றபின்னும் என் கைத்தட்டல் தொடர்ந்ததால் எழுந்த சத்தத்தில் மகேசுவரி ஏன் நீ பேசல என்று பேராசிரியர் அழைக்கவும், நான் பதறிப்போனேன். அய்யையோ, நாம் இருப்பது அவருக்கு தெரிந்து போச்சே என்று நினைத்து அவரைப் பார்க்க, அவரும் என்னைப் பார்க்க,,,, எது அந்த சங்க இலக்கியப் பாடல், எங்களை நட்பாக்க வைத்தப்பாடல், உறவுகளுக்குள் உறவாட வைத்தப் பாடல், வசந்தகால வாழ்க்கையாக்கியப் பாடல் நாளைச் சொல்கிறேன்.