Wednesday 25 March 2015



இலக்கணம் 1

தமிழ் இலக்கண உலகில்

முதல் நூல்
வழி நூல்
சார்பு நூல்

என்ற ஒரு பகுப்பு உண்டு

அதன் படி
அகத்தியம்            -முதல் நூல்

தொல்காப்பியம் -வழி நூல்

நன்னூல் சார்பு  -நூல்


தொல்காப்பியமே நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் தமிழ் மொழிக்கு இலக்கண முதல் நூல் ஆகும். இதற்கு முன் இருந்த அகத்தியம் பெயரால் மட்டுமே, நமக்கு கிடைக்கல என்று,

சரி,,,, சரி,,,,,,, நான் இலக்கண வகுப்பு எடுக்க வரல,



                     உயர்திணை
             திணை
                     அஃறிணை


இதில்
  உயர்திணைக்குரியோர் யார்?

       அஃறிணைக்குரியோர் யார்?

இதற்கு விளக்கம்

இலக்கண ஆசான் தொல்காப்பியர்

                உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அறிணை எனபனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே

என்றார்.

இதன் விளக்கம்,
மக்கள்  உயர்திணை
அவர் தவிர , அதாவது மக்கள் தவிர மற்றயவை அஃறிணை.
இது தான் அவர் சொல்லும் விளக்கம்
நம் அனைவருக்கும் புரியும்.
இதில் சங்தேகம் எதுவும் இல்லையே,,,,,,,,,,,,,

சரி இது இப்படியே இருக்கட்டும்.

இப்போ
        இவருக்கு பின்னர் வந்த சுமார் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படும், பவணந்தி என்பார் நன்னூல் என்ற இலக்கண நூல் ஆக்கினார்.13 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு. இவர் இதே பொருளுக்கு இலக்கணம் சொல்கிறார்.
அதாவது

                        மக்க டேவர் நரக ருயர்திணை
மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை

என்றார்.
இதன் பொருள்,
 மக்கள் தேவர் நரகர் உயர்திணை,
 மற்ற உயிர் உள்ளவும் அல்லவும் அஃறிணை.

புரிகிறதா?

இங்க தாங்க எனக்கு புரியல?

இந்த மக்கள் சரி

நான் நீங்க எல்லோரும் பார்த்திருக்கிறோம்.

இவர்கள் யாருங்க தேவர், நரகர்.


40 comments:

  1. Replies
    1. முதல் வருகைக்கும் முதல் கேள்விக்கும் நன்றிகள்.

      Delete
  2. கேள்வி ஊமைக் கனவுகள் விஜு ஆசான் அவர்களை நோக்கித் திருப்பபடுகின்றது! விஜு ஆசான் அவர்களே இதற்கு பதில் உரைப்பீர்களாக!

    எங்கள் அறிவுக்கு எட்டியவரை இது ஒரு வேளை புராண இலக்கியங்கள் தமிழில் தோன்றிய பிறகு ஏற்பட்டதாக இருக்கலாம். மதம் சம்பந்தப்பட்ட இலக்கியங்கள் வர ஆரம்பித்தப்பிறகு அதைச் சம்பந்தப்படுத்தி இலக்கணமும் சொல்லப்பட்டிருக்கலாமோ. ஏனென்றால் 12 ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுவதால் ....

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்கள் வருகைக்கும் கேள்வியை திருப்பியதற்கும் நன்றி. நானும் ஊமைக் கனவுகள் வாய்திறக்க,,,,,,,,,,

      Delete
  3. யாருங்க!.. தேவர்.. நரகர்!?..
    அவங்க எல்லாம் மேடைக்கு முன்னால வாங்க!..

    ReplyDelete
  4. என்ன ராஜு சார் நீங்களே இப்படி சொன்னா, நான் எப்படி அடுத்த பதிவு எழுதறது.வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோ,
    துளசிதரன் அய்யா சொல்வதுபோல் இலக்கணத்தோடு பெரிய பரிச்சயம் எனக்கில்லை. அதிலும் கரந்தையில் இருந்து பதிவுகள் இடும் உங்களோடு ஒப்பிடும் போது……….!
    கரந்தை………………………………………… அது என் ஆதர்சம்.
    பொதுவாக இலக்கணத்தின் வளர்ச்சி நிலையில் ( நீங்கள் குறிப்பிடுவது போல தொல்காப்பிய நன்னூல் வேறுபாடுகள் ) அது அப்பொழுதிருக்கும் மொழியின் உலக வழக்கையும் , இலக்கிய வழக்கையையும் ஒட்டி அமைவதைக் காணமுடியும்.
    தொல்காப்பிய வழக்குகள் பலவற்றின் அழிவு, வேறுபாடு, மாற்றம், மற்றும் புதிய விதிமுறைகள் இவற்றை நீங்கள் தொல்காப்பியத்திற்குப் பின் வந்த எல்லா நூல்களிலும் காண முடிவது, மொழியின் அக்கால கட்டத்தின் தேவை அவ்விலக்கண நூல்களுக்கு முன்னெழுந்த இலக்கிய நூல்களின் மொழிப்பயில்வு இவை சார்ந்ததே..!!
    நன்னூலின் காலத்திற்கு முன் உள்ள இலக்கியங்களில் நீங்கள் தேவர்களையும் நரகர்களையும் இயல்பாகக் காணலாம். சான்றாகப் பாரதமும் இராமயணமும் இவர்களின் பாத்திரப்படைப்பைக் காட்டுவன. நம்மிடம் இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற ஐம்பெரும் ஐஞ்சிறுங் காப்பியங்களில் தேவரும் நரகரும் உண்டு. தமிழகத்தில் இருக்கின்ற வைதிக – அவைதிக சமயிகளின் நம்பிக்கை சார்ந்த விடயம் இது.
    தேவர்கள் மேலோகத்தவர் என்றும் நரகர்கள் கீழுலகத்தவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
    சூரியர் சந்திரர் போன்றோரை நாம் வழக்கில் அஃறிணைபால் படுத்துகிறோம். ( சூரியன் உதித்தது. நிலவு தேய்ந்தது) அதே நேரம் புராண வழக்கில் அவர்கள் தேவர்களாகக் கருதப்படும் போது இலக்கியங்கள் அவர்களை உயர்திணையின்பாற் படுத்துகின்றன. அப்பொழுது
    “சூரியன் மானிடப் பெண்ணை மணக்கிறான்“ என்றே கூறமுடியும்.
    இங்குச் “சூரியன் மானிடப் பெண்ணை மணக்கிறது“ என்று அஃறிணைபாற் படுத்தல் நம் மரபில் இல்லை.
    புதிய இலக்கணம் பழைய இலக்கணத்தின் போதாமை வழக்கிறப்பு எளிமையாக்கம் போன்றவற்றை ஒட்டியே உருப்பெருகிறது.
    நீங்கள் காட்டிய பவணந்தியின் காலம் தமிழ்ப் பக்தி இலக்கியக் காலத்தையும், காப்பிய காலத்தையும், புராண காலத்தையும் கடந்தே வந்திருக்கிறது. அவன் தனக்குமுன் சமுதாயத்தில் உயிர்ப்புடன் உலவும் இலக்கியங்களுக்குக் இலக்கணம் சொல்லாமல் கண்ணடைத்துக் கடந்திடமுடியாது.
    எனவே இலக்கியங்களில் இதுபோல் தேவரும் நரகரும் வரும் இடங்களில் இவற்றை உயர்திணைபாற் படுத்துவதா அஃறிணைபாற் படுத்துவதா என்னும் ஐயம் அறுக்கும் சூத்திரமாகவே நான் பவணந்தியின் இச்சூத்திரத்தைக் காண்கிறேன்.
    தொல்காப்பியம் இது பற்றிப் பேசாதது தொல்காப்பியர் காலத்தில் இச்சொற்களின் ஆட்சி சார்ந்தது. அவை அன்று இல்லாதிருக்கலாம். அல்லது முக்கியத்துவமற்றிருக்கலாம். அவருக்கு இதற்குத் தனித்திலக்கணம் கூறுமளவிற்கான நெருக்கடி இல்லை.
    இதைப்போன்றே நாம் இன்று திருநங்கையர் என்று சொல்லும் மூன்றாம்பால் இனத்தை ஆண்பாலில் படுத்துவதா பெண்பாலிற் படுத்துவதா என்பதற்கும் தொல்காப்பியம் வழிகாட்டவில்லை. அங்குள்ளது ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல், பல்லோர் அறி சொல் அஃறிணையில் ஒன்றறி சொல் , பலவறிசொல் என்பனதான். அவர் காலத்தில் இவ்வாட்சியின் தேவை சார்ந்ததே இவ்விடுபடலும்.


    ……………………………………………………..தொடர்கிறேன்…………..

    ReplyDelete
    Replies
    1. நன்னூலார் காலத்தில் அவர்களை “அலி வந்தான் என்று சொல்வதா அலி வந்தாள் என்று சொல்வதா “ என்பது போல், இவர்களை எப்பாலின்கீழ்க் ( ஆண்பால் பெண்பால் ) கொணர்வது என்ற பிரச்சினை வருகிறது.
      நீங்கள் காட்டிய நன்னூல் சூத்திரத்தினை அடுத்து உயர்திணை அஃறிணைப்பால்களை விளக்கியபின் பவணந்தி அந்தச் சிக்கலையும் தீர்க்கிறார்.
      ஒருத்தி பிறப்பில் பெண்ணாகப் பிறந்து பின் தன்னை ஆணாக உணர்கிறாளா..? அவளுக்குப் பேடு என்பது பெயர். அவளை அவள் விரும்பும் ஆண்பாலில் அமையுங்கள்.
      எனவே பேடு வந்தான்.
      ஒருவன் பிறப்பில் ஆணாய்ப் பிறந்து பின் பெண்ணாய்த் தன்னை உணர்ந்து தான் பெண் என்று அழைக்கப்பட விரும்புகிறானா..?
      அவனைப் பெண்தன்மையில் ( அலி ) பெண்பாலில் அழையுங்கள்.
      அலி வந்தாள்.
      என்ன தன்மையில் இருந்து என்ன தன்மைக்கு மாறினர் எனத் தெரியவில்லையா அல்லது ஆண்பாற் படுத்துவதா பெண்பாற்படுத்துவதா என்ற குழப்பம் உள்ளதா அப்போது இவர்களை அஃறிணையின் பாற்படுத்தினும் தவறில்லை.
      பேடு வந்தது.
      அலி வந்தது..

      நன்னூலில் சொல்லப்பட்டுத் தொல்காப்பியத்தில் சொல்லப்படாத இதுபோன்ற பகுதிகள்யாவினும் நீங்கள் மொழிமாற்றத்தையும், மொழிக்கலப்பையும், வடமொழி தமிழோடுறழ்ந்ததன் தாக்கத்தையும் அவதானிக்க முடியும்.

      பொதுவாக இலக்கியம் என்பது படைப்பாளனின் தரிசனம். அதில் புஷ்பக விமானம் வந்திறங்கும். பத்துத்தலை இராவணன் வருவான். கழுகு பேசும். குரங்கு தன் வாலால் அரியாசனம் அமைத்து அசுரனோடு உரையாடும். அவற்றை அறிவியல் கண் கொண்டு பார்ப்பது இலக்கியத்தினைப் பார்க்கும் முறையல்ல.

      சமுதாயம் விரும்புகின்ற, அது அங்கீகரிக்கின்ற இலக்கியங்களைக் கடந்துவரும் இலக்கண ஆசிரியனின் கடமை அது காட்டும் மரபினை ஒட்டிப் பழைய மரபில் இருக்கும் பொதுவிதிகளைத் தொட்டுப் புதிய கொள்கைகளை வகுப்பதே…!
      எனக்கு என்னமோ பவணந்தி இங்கு அதைச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

      இது என் பார்வை மட்டுமே..!

      என்னையும் பொருட்படுத்தி அழைத்தமைக்குச் சகோதரிக்கு நன்றியும், துளசிதரன் ஆசானுக்கு வணக்கங்களும்..‘!
      ( இப்படி மாட்டி விடுறிங்களே ஆசானே…..:)))

      நன்றி.

      Delete
    2. அய்யா தங்களை இங்கு மாட்டி விடனும் என்று தான் நான் அவசரமாக இப்படி ஓரு பதிவு எழுதினேன். என் நீண்ட கால வினாவும். தாங்கள் இன்னும் ,,,,,,,,,,,,,,,,
      சமுதாயம் விரும்புகின்ற, அது அங்கீகரிக்கின்ற இலக்கியங்களைக் கடந்துவரும் இலக்கண ஆசிரியனின் கடமை அது காட்டும் மரபினை ஒட்டிப் பழைய மரபில் இருக்கும் பொதுவிதிகளைத் தொட்டுப் புதிய கொள்கைகளை வகுப்பதே…
      சரி,
      ஆனால்
      இது எப்படி சாத்தியப்படும்.
      தங்கள் வருகைக்கு நன்றி,
      மீண்டும் வேறு கோணத்தில் யோசித்து
      எனக்கு பதில் தந்தால் நலம்
      என் மண்ட குடைச்சல் தீறும்.
      மீண்டும் என் நன்றி,
      என் மேல் தவறு இல்லையப்பா,,,,,,,,,,,,,,,,
      அய்யா தான் மாட்டிவிட்டார்கள்,,,,,,,,,,,,,,,,

      Delete
    3. அய்யா இந்த அலி பாகுபாடும் எப்போ வந்தது என்று யோசித்துப் பாருங்களேன்.

      Delete
    4. சகோ,
      வணக்கம்.

      உடனே மீண்டும் வருகிறேனோ..:))

      தொல்காப்பியத்தின் முதற் நூற்பாவில் இருந்தே இந்தப் பழைய மரபினை ஒட்டிப் புதிய விதிகளை நன்னூல் கூறிச்செல்வதை என்னால் காட்ட முடியும்.

      தொல்காப்பியம் சார்பெழுத்துகள் என எங்கும் கூறவில்லை. அங்கிருப்பது சார்ந்து வரல் மரபினை உடையவைதான்.

      அதுவும் மூன்று.

      நன்னூல் அப்பொதுவிதியிலிருந்து வகுக்கும் புதிய கொள்கைதான் சார்பெழுத்தின் வகை 10 என்பதும் அதன் விரி 369 என்பதும். ( தவறெனில் திருத்துங்கள். நினைவில் இருந்தே எழுதுகிறேன். ) ஏனெனில் அதற்கு முன் எழுந்த விருத்தி காரிகையோடு ஒட்டிய யாப்பு நூல்கள் நுவலும் எழுத்துகளின் தேவையோடு ஒட்டியது அது.

      அடுத்ததாய்,

      கரந்தையில் இருக்கிறீர்கள் என்றால், அங்குள்ள தமிழ்ச்சங்கம் என்பதில் தொல்காப்பிய மரபுப் படி “ சங்கம் “ என்பதே தமிழ்ச்சொல் இல்லை.

      தொல்காப்பிய இலக்கணம் கூறும்,

      “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
      அஐஔ வெனும் மூன்றலங் கடையே “

      எனும் சூத்திரத்தை ஒட்டி

      சகர மெய் அ எனும் எழுத்தோடு சேர்ந்து சொல்லுக்கு முதலில் வராது என்றால் “ சங்கம் “ தான் எங்கே..? :))

      பின் வந்த நன்னுல் ச கரம் அகரத்தோடு கூடி மொழி முதல் ஆகும் என

      “பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய
      ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல்“

      என விதி வகுத்துப் போனது. ஏனென்றால் சகரம் மொழிக்கு முதலாக வழக்கிலும் இலக்கிய ஆட்சியிலும் நன்னூலுக்கு முன்பே ( ஏன் சங்க இலக்கியச் சொல்லாட்சியிலேயே )இருந்தது .
      இதையே “ புதிய இலக்கணத்தை எழுதுவோன் மரபினை ஒட்டிப் பழைய மரபில் இருக்கும் பொதுவிதிகளைத் தொட்டுப் புதிய கொள்கைகளை வகுத்தல் “ என்பதாய் நான் தங்களின் பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.

      அடுத்துத் தாங்கள் கேட்டிருக்கும் அலி பற்றிய பாகுபாடு எப்போதிருந்து வந்தது என்பதற்கு நாம் தமிழிலக்கியம் சொல்லும் அரவான் பற்றிய குறிப்புகளில் இருந்து இதை அணுக வேண்டும். கிருஷ்ணன் மோகினியாய் மாறி அவனை மறந்து கொண்டதும் அவன் பாரதப்போரில் தன்னையே களப்பலியாய்க் கொடுத்ததும் நாட்டார் வழக்காற்றில் தெய்வதமாய் வழிபடப்படுவதும் இன்றும் தொடர்கிறது. இதன் தோற்றம் பற்றி ஆராய்தல் மானிடவியலாளர் கடன்.

      நீங்கள் இலக்கிய ஆதாரம் கேட்டால் முதன்முதலில் இந்நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ள பெருந்தேவனாரின் பாரதவெண்பாவைக் காட்டமுடியும்.

      இதன் காலம் தோராயமாக 9 ஆம் நூற்றாண்டு.

      நன்றி.

      Delete
    5. தாங்கள் சுட்டும் இலக்கிய சான்றுகள் அத்துனையும் நூல் வழி சரியே. தவறு என நான் கூற முடியாது. சகரம் மொழி முதல் ஆகாது. தொல்காப்பியர் சுட்டிச் செல்லவில்லை. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது எப்போ? அப்போ அதன் பெயர் என்ன?
      சங்கம் என்பது இல்லை, சரி, முதல் சங்கம் ,இருந்தது என்றும் அதனுள் எழுந்த நூலே தொல்காப்பியம் என்றும் நம் இலக்கியங்கள் சொல்கின்றவே? தொல்காப்பியத்தின் முதற் நூற்பாவில் இருந்தே இந்தப் பழைய மரபினை ஒட்டிப் புதிய விதிகளை நன்னூல் கூறிச்செல்வதை என்னால் காட்ட முடியும்.என்ற தங்களின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் உண்மை என்ன என்றும் தன் மன உணர்வுகளைக் இலக்கணத்தில் விதியாக்க முடியுமா? இலக்கணம் என்பது விதி அல்லவா? விதி சில இடங்களில் விலக்கு அளிக்கப்படும். ஆனால் ,,,,,,,,,,,,,,,,,
      சரி
      அய்யா

      தங்களின் விரிவான கருத்துக்கள் என்னை ஊக்கப்டுத்துகிள்றன. மேலும் எழுத வாழ்த்துங்கள். நன்றிகள் பல.

      Delete
    6. அன்புச் சகோதரி

      வணக்கம். முதலில் நீங்கள் என் பதிவில் வந்து சுட்டி கொடுத்ததால்தான் நான் தங்களின் இந்தப் பதிவிற்கு வந்தேன். துளசிதரன் ஆசான் இதன் பின்னூட்டப்பகுதியில் என்னை அழைத்திருந்ததையும் அதற்கு நீங்கள் என்னை வாய்திறக்கப் பணித்திருந்ததையும் கண்டுதான் எனக்குத் தெரிந்ததை குறித்துப் போனேன். நீங்கள் தமிழ்ச்சங்கத்தில் தமிழறிஞர்கள் பலருக்கு மத்தியில் இருக்கிறீர்கள். அச்சங்க நூலகம் பழைமையானது. மிகப்பெரிது. அறிவார்ந்த பலர் பேராசிரியர்களாக இருக்கும் அவைக்களம் அது. உங்களின் ஐயப்பாடுகளைக் கண்சிமிட்டும் நேரத்திற்குள் களையத்தக்க தமிழ்ப்புலம் அங்கிருக்கிறது.


      என் பின்னூட்டங்களோடு ஒட்டி உங்களின் கேள்விகள் தொடர்வதனால்தான் நான் அவற்றிற்குப் பதிலளிக்க நேர்கிறது. உங்களின் கேள்விகளின் தொனியை என்னால் அவதானிக்க இயலவில்லை. என்றாலும் உங்களின் கேள்விகளோடு முடியும் என் பின்னூட்டத்திற்கான உங்களின் பதில்களுக்கு எனது புரிதலின் அடிப்படையில் பதிலளிக்கக் கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனென்றால் நான் புரிந்து கொண்டது தவறாய் இருக்கலாம். அதை நீங்கள் திருத்துவீர்களாயின் பெரிதும் மகிழ்வேன்.


      முதலில் உங்களின் கேள்விகள் ஒவ்வொன்றிற்காக வருகிறேன்.

      //சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது எப்போ? அப்போ அதன் பெயர் என்ன?//
      என்ற தங்களின் முதல் கேள்விக்கு என்னால் விடையளிக்க முடியாது. ஏனெனில் அது முற்றிலும் வரலாற்றியல் தொல்லியல் சமூகவியல் சார்ந்த விடயம்.

      “அப்போ அதன் ( சக்கரத்தின் ) பெயர் என்ன“ என்ற தங்களின் கேள்விக்குத் தமிழின் பண்டைய இலக்கியங்களைக் கொண்டு எனக்குத் தெரிந்தவரை ஓரளவிற்குப் பதில் அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

      பண்டைய இலக்கியங்கள் குறிப்பாய்த் தமிழில் நமக்குக் கிடைக்கும் முதன்மை இலக்கியங்கள் எனச் சங்க இலக்கியங்களை நீங்கள் எடுத்துக் கொள்வதாய் இருந்தால் அதில் “ சக்கரம்“ இல்லை. அதாவது சக்கரம் இருந்தது. ஆனால் அது அப்பெயரில் இல்லை. சக்கரம் என்பதற்குப் பழந்தமிழில் வழங்கப்பட்ட பெயர் “ஆழி“ என்பது. இது கடலுக்கும் பொருந்தும் எனினும் சக்கரம் என்று நாம் இன்று வழங்கும் சொல்லுக்கு மாற்றாய் அன்று பயன்படுத்தப்பட்டது “ஆழி“ என்னும் சொல்தானே தவிர சக்கரம் இல்லை.

      அதற்குப் பின்வரும் ஆதாரங்களைத் தருகிறேன்.

      “கேட்டிசின் வாழி தோழி தெண்கழி
      வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்“ ( நற்றிணை-78)

      “கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே
      அடும்புகொடி துமிய ஆழி போழ்ந்தவர்“ ( நற்றிணை-338)

      “மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
      விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
      பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக்
      கலங்குகடற் றுவலை யாழி நனைப்ப“ ( குறுந்தொகை- 205)

      “எனைப் பெரும் படையனோ, சினப் போர்ப் பொறையன்?'
      என்றனிர்ஆயின் ஆறு செல் வம்பலிர்!
      மன்பதை பெயர, அரசு களத்து ஒழிய,
      கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை
      மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்“ ( பதிற்றுப்பத்து 77)

      “மல்லரை மறம் சாய்த்த மலர்த் தண் தார் அகலத்தோன்,
      ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
      கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
      கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்“ ( கலித்தொகை 134 )

      “விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
      வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
      காரும் ஆர்கலி தலையின்று தேரும்
      ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
      வள் வாய் ஆழி உள் உறுபு உருள,“ ( அகநானூறு-54 )

      “முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
      ஒண்பல் மலர கவட்டிலை அடும்பின்
      செங்கேழ் மென்கொடி ஆழி அறுப்ப“ ( அகநானூறு – 80 )

      “வாவுடை மையின் வள்பிற் காட்டி
      ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி
      செழுநீர்த் தண்கழி நீந்தலின் ஆழி
      நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்“ ( அகநானூறு – 160 )
      “புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
      தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
      ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
      திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
      அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
      வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை“ ( அகநானூறு – 224 )

      உரைகளின் வாயிலாக இவ்விடங்களில் ஆழி என்பதற்குச் சக்கரம் என்னும் பொருளை நீங்கள் கண்டறிய முடியும். மாறாய்ச் சக்கரம் என்னும் சொல் ஓரிடத்தில் கூடச் சங்க இலக்கியங்களில் இல்லை. இதுபோல் இன்னும் சான்றுகாட்டத்தக்க இடங்கள் இருப்பதை வாசிப்பில் நீங்கள் அவதானிக்க முடியும்.
      ..................................................................................தொடர்கிறேன்......

      Delete
    7. இறுதியாய் நீங்கள் உங்கள் பதிவில் கேட்ட தேவரும் சக்கரத்தோடு வரும் மன்னிக்க ஆழியோடு வரும் புறப்பாடல் கீழ்க்காண்பது,

      “அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்
      அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்
      நீரக விருக்கை யாழி சூட்டிய
      தொன்னிலை மரபினின் முன்னோர் போல“ ( புறநானூறு – 99 )

      ஆழி என்பதைத் தவிர உருளை உருளி என்னும் பெயர்கள் சிற்சில இடங்களில் சக்கரத்தைக் குறித்து வருகின்றன.
      எனவே பழந்தமிழில் சக்கரம் எனும் சொல்லாட்சி இல்லை. அது ஆழி எனும் பெயரால் அறியப்பட்டது. இதுவே உங்களின் முதற் கேள்விக்கான விடை.

      சகரம் மொழிக்கு முதலாகாது என்று தொல்காப்பியம் சொன்னாலும் குறைந்த அளவிலான அதன் ஆட்சி சங்க இலக்கியங்களில் உள்ளது என்பதை நான் எனது முந்தைய பின்னூட்டத்திலேயே ஒத்துக் கொண்ட பிறகு இங்குச் சக்கரம் பற்றிய தர்கம் எதற்கு எனத் தெரிவில்லை.


      அடுத்ததாய்,

      //சங்கம் என்பது இல்லை, சரி, முதல் சங்கம் ,இருந்தது என்றும் அதனுள் எழுந்த நூலே தொல்காப்பியம் என்றும் நம் இலக்கியங்கள் சொல்கின்றவே?// என்னும் உங்களின் கேள்விக்கு வருகிறேன்.

      எந்த இலக்கியம் இக்கதையை முதலில் சொல்கிறது. இதைச் சொல்வதும் இலக்கணம் தானே? எனக்குத் தெரிந்து இக்கதையை முதலில் கூறுவது இறையனார் அகப்பொருள் என்னும் அகவிலக்கண நூல்.

      அதுவும் இப்படி….

      // “தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம்இரீஇயினார் பாண்டியர். அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்ப. இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும்
      தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும்,துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத் தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும்,தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார் வெண்தேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்
      கவியரங்கேறினார் ஐவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து என்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது. இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங் குன்றூர் கிழாரும், இளந்திருமாறனும், மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும்,எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும், என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப.//

      எனக்கென்ன ஆச்சரியம் என்றால் தேவர் நரகர் என்பதையே நம்பாத நீங்கள் திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும் முருகவேளும் மானுடருடன் இணைந்து ஒவ்வொருவரும் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் வாழந்து வளர்த்த சங்கக்கதையைத் தொல்காப்பியத் தோற்றுவாய்க்கு ஆதாரமாகக் காட்டுகிறீர்களே என்பதுதான்!!!

      இதைச் சொல்லும் இறையனார் அகப்பொருளின் காலமும் தோராயமாக 9 ஆம் நூற்றாண்டுதான்.

      ............தொடர்கிறேன்

      Delete
    8. இறுதியாய்ச் சகோதரி,
      இந்த தேவர் நரகர் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. சிக்கல் நாம் நம்புகிறோமோ இல்லையா என்பதல்ல… அதை நம்புகிறவர்கள் மொழிக்குள் வரும்போது மொழியைப் பயன்படுத்தி இலக்கியங்களைப் படைக்கும் போது அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான தீர்வு முந்தைய இலக்கண நூல்களில் இல்லாத போது ஏற்கப்பட்ட இலக்கியங்களில் இருந்து புதியதாய் இலக்கண நூலைக் கட்டமைப்பவனுக்கு அதற்குத் தீர்வு சொல்லக் கடமை இருக்கிறது என்பதைத்தான்.
      வலையுலகில் உங்களின் எண்ணங்கள் மென்மேலும் மெருகேறிப் பதிவுகளாக என்னைப் போன்றோர்க்குப் பெரிதும் பயன்பட வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
      நன்றி.

      Delete
    9. தங்களிடம் தான் நான் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தங்களின் பல பதிவுகளை நான் ஒரே நாளில் படித்தேன். தங்கள் வருகைக்கும் பல கருத்துக்கள் வழங்கியமைக்கும் என் நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள், நான் தெளிய இலக்கியத்தில், நன்றிகள்.

      Delete
    10. சகோ தங்களின் இந்த பதில் நான் சங்கக்கதையைத் தொல்காப்பியத் தோற்றுவாய்க்கு ஆதாரமாகக் காட்வில்லை சகோ, அதன் காலம் எது என விளக்கவே சக்கரம் பற்றி பேச வந்தேன். தங்களின் புரிதல் சரியே. எனக்காக இத்துனைத் தகவல்கள் தொகுத்து தந்துள்ளீர்கள். இவை எல்லோருக்கும் பயன்படிம்.

      Delete
  6. இலக்கணம் 1 இல் உரைத்தவை யாவும் உண்மை
    இலக்கணம் 2 இல் உரைக்கவுள்ளதை எதிர்பார்க்கிறேன்
    தங்கள் இலக்கணத் தெளிவூட்டலை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இலக்கணம் 1 உரைத்ததை உண்மை என்று ஏற்றுக்கொண்டீர்களா? தங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  7. பதிவை ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்களுடன்
    பதிவைவிட பெரிய விளக்கமளிக்கும் பின்னூட்டங்கள்.
    பலே.

    ReplyDelete
  8. எப்படியோ ஒரு கேள்வி எழுப்பி விரிவான பின்னூட்டங்கள் மூலம் மொழி அறிவை வளர்க்க உதவி புரிந்துவிட்டீர்கள்! சிறப்பான விளக்கங்கள் தந்த விஜி அவர்களுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஊக்கப்டுத்தும் போது சிறப்பாக அமையாதா? தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  9. வணக்கம்
    ஐயா

    வினாவை எழுப்பி அதற்கான விளக்கத்தை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல, ருபன் சார், என்னுடைய ஆர்,டி,எக்ஸ் படிக்கலையா?

      Delete
  10. இவர்கள் யாருங்க தேவர், நரகர். என்ற கேள்விகளுக்கு ---தேவர்கள் மேலோகத்தவர் என்றும் நரகர்கள் கீழுலகத்தவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.--- நண்பர் “ஊமைக்கனவுகள்.” சொல்வதுதான் எனக்கு சரி என்று படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வலிப்போக்கரே இவர்கள் உங்களுடன் பயணம் செய்தார்களா?

      Delete
  11. அன்புள்ள சகோதரி,

    தொல்காப்பியர்: மக்கள் உயர்திணை , மக்கள் தவிர
    மற்றயவை அஃறிணை.

    இவருக்கு பின்னர் வந்த பவணந்தி நன்னூலில் மக்கள் தேவர் நரகர் உயர்திணை, மற்ற உயிர் உள்ளவும் அல்லவும் அஃறிணை.

    நன்னூலார் காலத்து அல்லது அதற்கு முந்திய காலத்து இலக்கியங்களை வைத்தே இலக்கணம் எழுதியிருப்பார்.

    தேவர்கள் மேலோகத்தில் வாழ்கிறவர்கள்; நரகர்கள் கீழுலகத்தில் (பாதள உலகம் ) வாழ்கிறவர்கள் என்றும் அந்தக் காலத்தில் நம்பியிருக்கிறார்கள். மூவுலகம் இருக்கின்றது என்று வாழ்ந்தகாலம்... மூன்றாவது உலகம் பூலோகம் என்கிறார்கள். அன்றைய நம்பிக்கையின்படி பவணந்தி எழுதியிருக்கிறார்.

    தேவலோகம் இருப்பதாகவும், நரகம் இருப்பதாகவும் அல்லது எங்கே இருக்கிறது என்றும் அறியப்படவில்லை. அந்தக் கதைகளைப் புராண இதிகாசங்கள் படிப்பதற்காக பவணந்தியார் சொல்வதை வைத்துக்கொள்ளலாம்.


    பெண் - ஆணாக மாறினால் பேடு என்றும்...
    ஆண் - பெண்ணாக மாறினால் ‘அலி’ என்றும் பவணந்தி கூறியிருக்கிறார். ஆனால் நடைமுறையில் ‘பேடு’ என்று யாரையும் அழைக்கும் வழக்கம் இல்லை. ‘அலி’ என்று அழைத்து... அஃது ஓர் இழிவான சொல் என்பதைப்போல சமூகப் பார்வை அமைந்து, அவர்கள் நடமாடக்கூட கூனிக்குறுகி பாவப்பட்ட ஜென்மங்களைப்போல இருக்கின்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களை ’திருநங்கை’ என அழைக்கின்ற புதுநிலை வந்திருக்கின்றது.

    எனக்கென்னமோ இதில் தொல்காப்பியர் முன்பு சொன்னதே ஏற்புடையதாகக் கொள்வது சிறப்பு என்றே கருதுகிறேன்.

    நன்றி.








    ReplyDelete
    Replies
    1. தேவலோகம் இருப்பதாகவும், நரகம் இருப்பதாகவும் அல்லது எங்கே இருக்கிறது என்றும் அறியப்படவில்லை. இப்படி அறியப்படாததை இலக்கணம் ஆக்கலாமா?
      தங்கள் வருகைக்கும், அன்பின் கருத்துக்கும் நன்றிகள் பல சகோ,,,,,

      Delete
  12. நரகர், நரகத்துல இருப்பாரு.... தேவர் தேவகோட்டையிலே இருப்பாருனு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அபுதாபி இருப்பவர் எங்கு இருப்பார்? தங்கள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  13. தாமதமாக தோன்றியவை....“இவர்கள் யாருங்க தேவர், நரகர்.” தேவர் சரி, நரகர் என்பதை அசுரர் என்று வரவேண்டும். நரகம்,தேவலோகம் எதுவும் அறியப்படவில்லை என்றாலும் அதன் காட்சிகள் பூமியில் அதுவும் இந்தீயாவில் ரெம்பவும் கண்கூடாக பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அசுரர் எனின் அவர் எவ்வாறு உயர்திணைப்படுவார். தங்கள் அன்பின் மீள் வருகைக்கு நன்றிகள் பல.

      Delete
  14. ஆகா
    ஆகா
    கருத்துரைகளையும்,
    கருத்துரைகளின் செய்திகளையும்
    அதன் நீள்ங்களையும்
    பார்க்கப் பார்க்க
    படிக்கப் படிக்க
    மனம் மகிழ்கின்றது சகோதரியாரே
    இதுபோன்ற விவாதங்கள் தொடர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சகோ தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள் நான் வளர,,,,,,,,,,,,,,,,,,

      Delete
  15. “நீங்கள் காட்டிய பவணந்தியின் காலம் தமிழ்ப் பக்தி இலக்கியக் காலத்தையும், காப்பிய காலத்தையும், புராண காலத்தையும் கடந்தே வந்திருக்கிறது. அவன் தனக்குமுன் சமுதாயத்தில் உயிர்ப்புடன் உலவும் இலக்கியங்களுக்குக் இலக்கணம் சொல்லாமல் கண்ணடைத்துக் கடந்திடமுடியாது.
    எனவே இலக்கியங்களில் இதுபோல் தேவரும் நரகரும் வரும் இடங்களில் இவற்றை உயர்திணைபாற் படுத்துவதா அஃறிணைபாற் படுத்துவதா என்னும் ஐயம் அறுக்கும் சூத்திரமாகவே நான் பவணந்தியின் இச்சூத்திரத்தைக் காண்கிறேன்.”

    ஊமைக்கனவுகள் சகோ சொல்வது மிகவும் ஏற்புடையதாயிருக்கின்றது. தொல்காப்பியர் காலத்திற்குப் பிறகு தோன்றிய பக்தி இலக்கியத்திலும் புராண இலக்கியத்திலும் தேவர், அரக்கர்களை எந்தத் திணையில் சொல்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடும். அந்தச் சந்தேகத்தைத் தீர்க்கவே பவணந்தி முனிவர் தொல்காப்பியர் சொல்லாத தேவர், அரக்கரை தம் இலக்கணத்தில் சேர்த்திருக்க வேண்டும். படைப்பிலக்கியத்திற்கேற்றவாறு இலக்கணத்தில் சேர்க்க வேண்டியதைச் சேர்க்கவும், நீக்க வேண்டியதை நீக்கவும், புதுப்பிக்கவும் வேண்டியது தானே இலக்கண ஆசிரியரின் வேலை? அதைத் தான் பவணந்தி முனிவர் செய்திருக்கிறார் என்ற அவரின் கூற்று முற்றிலும் சரி.
    “ஒருத்தி பிறப்பில் பெண்ணாகப் பிறந்து பின் தன்னை ஆணாக உணர்கிறாளா..? அவளுக்குப் பேடு என்பது பெயர்
    அவளை அவள் விரும்பும் ஆண்பாலில் அமையுங்கள்.
    எனவே பேடு வந்தான்.”
    பெண்ணாகப் பிறந்து ஆணாக உணர்வதைப் பேடு என்று நன்னூல் சொல்வதையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தொல்காப்பியம் சொல்லாத மூன்றாம் பாலினம் பற்றியும் நன்னூல் சொல்கிறது என்ற உண்மையையும் தெரிந்து கொண்டேன்.
    கேள்வி கேட்டு சகோவிடம் திருப்பி புதுச்செய்திகளை அறிந்து கொள்ள உதவிய மகேஸ்வரிக்கும், சந்தேகங்களைத் தீர்த்து வைத்த சகோவிற்கும் என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோ தங்கள் அளவுக்கு எனக்கு தெரியாது எனினும் என் சிந்தையில் தோன்றி சில கேள்விகளை முன்வைத்தே இந்த பதிவு, தாங்கள் சொல்வதுபோல், பவணந்தியின் காலம் தமிழ்ப் பக்தி இலக்கியக்காலத்தையும், காப்பிய காலத்தையும், புராண காலத்தையும் கடந்தே வந்திருக்கிறது. அவன் தனக்குமுன் சமுதாயத்தில் உயிர்ப்புடன் உலவும் இலக்கியங்களுக்குக் இலக்கணம் சொல்லாமல் கண்ணடைத்துக் கடந்திடமுடியாது. நான் ஏற்றுக்கொள்கிறேன், அவ்வாறு தன் கண்முன் உலவும் கருத்துகள் அன்றி அவன் இலக்கியங்கள் வழி என்று இருக்கலாமே,,,,,,,,,, உயிர்ப்புடன் உலவும் எனில் தேவரும் நரகரும் எங்கு? மேலும் தெய்வம் எனும் விலங்கனிங்கள் எப்பாலில் அடங்கும், பிறப்பால் ஆண் பெண் ,நடவடிக்கை வைத்தா பாலிண பாகுபாடு?
      இறுதியாய்,
      எனக்கு தெரிந்த செய்திகளைப் பகிர்ந்துக்கொண்டேன், தொடர்ந்து வருங்கள் கருத்து சொல்லூங்கள் வளர்கிறேன். நன்றி சகோ,,,,,,,,,,

      Delete
  16. முதலில் தங்களுக்கு நன்றிங்க தோழி. இப்படி ஒரு புரிதலை தந்தமைக்கு. கேள்வியும் பதிலுமாக நீண்ட பின்னூட்டங்களை படித்து வியந்தேன். இது போன்ற பகிர்வுகளினால் என்னைப் போன்றவர்கள் கற்பார்கள்.

    ReplyDelete
  17. தங்கள் வருகைக்கு முதலில் நன்றிகள், தொடர்ந்து வந்து கருத்துச் சொல்லவும்.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. வாருங்கள் சகோதரி பதிவினை காண்பதற்கு!
    பாரிசில் பட்டிமன்ற தர்பார்
    http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
    வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete